வவுனியாவில் 8 மாதக் குழந்தை கடத்தல் : லண்டனில் இருக்கும் கணவரே காரணம் : மனைவி முறைப்பாடு!!

558

வவுனியாவில் நேற்றைய தினம் அதிகாலையில் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கடத்தல் சம்பவம் லண்டனில் இருக்கும் தனது கணவராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனைவி இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

வவுனியா – குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய யுவதி ஒருவர் லண்­டனைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வரை இந்­தியாவுக்கு சென்று திரு­மணம் செய்­துள்ளார்.

கணவன் லண்டன் சென்­றதும் குறித்த யுவதி வவுனியாவில் தனது தாயா­ருடன் வசித்து வந்­துள்ளார். இதன் பின்னர் இவர்­க­ளுக்கு ஒரு ஆண் குழந்­தை ஒன்று பிறந்­துள்­ளது.

இந்த நி­லையில் கணவன் ஏற்­க­னவே திரு­மணம் செய்தவர் என்­பது குறித்த யுவதிக்கு தெரி­ய­வந்­த நிலையில் இரு­வ­ருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்­பட்டுள்ளன. இதன் விளைவாக கடந்த 5 மாதங்­க­ளாக குறித்த யுவதி கண­வ­னு­ட­னான தொடர்பை துண்­டித்­துள்ளார்.

இதன்­போது கணவன் தனது குழந்­தையை தரு­மாறு கேட்டுள்ளதுடன், குழந்­தையை கடத்­துவேன் எனவும் தொலை­பே­சியில் மிரட்­டி­யுள்­ள­தாக யுவதி தனது முறைப்­பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா குட்செட் வீதி ஒழுங்கையில் உள்ள வீட்டில் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் ஆறு பேர் கொண்ட குழுவினரால் நேற்று அதிகாலை கடத்தப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் வவு­னியா பொலிஸார் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ்வின்-