வவுனியாவில் கடந்த 31.05.2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் நேற்று 02.06.2018 இரவு 8.30 மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்டனர்.
குழந்தையும் தாயையும் பார்வையிட்ட வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தென்னக்கோன் அவர்களுடன் அளவளாவியதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்திருந்தார்.
குழந்தையுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் இரு பெண்களையும் குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
கடத்தல் சம்பவம் இடம்பெற்றதையடுத்து வன்னி பிரதிபொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு வாகன சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று குழந்தையையும் சந்தேக நபர்களையும் மீட்டுள்ளோம்.
அத்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குழந்ததையின் தாயார் எனது குழந்தை துரிதமாக மீட்கப்பட்டமைக்கு வவுனியா பொலிசார்தான் காரணம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னை பழிவாங்கும் நோக்குடனே எனது குழந்தையை எனது கணவர் கடத்தினார் என தெரிவித்தார்.
வவுனியாவில் கடத்தப்பட்ட 8 மாத ஆண் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு!!
வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கடத்தியவர்களை கைது செய்துள்ளதுடன் குழந்தையும் மீட்டெடுத்துள்ளனர்.
தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு நோக்கி சென்றுள்ளனர்.
குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார். தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















