வவுனியாவிலுள்ள அலுவலகம் ஈரப்பெரியகுளத்திற்கு இடமாற்றம் : தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை!!

610

மன்னார், வவுனியா பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை காரியாலயத்தினை ஈரப்பெரியகுளம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

இவ் அலுவலகத்தினை வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒரு பகுதியில் அமைத்துத்தருமாறு விவசாயிகள் கோரியுள்ளார்கள். விவசாயிகள் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈரப்பெரியகுளம் பகுதியில் அரை ஏக்கர் காணியில் தென்னை பயிர்ச்செய்கை அலுவலகத்தினை நிரந்தரமாக அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்களினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் வவுனியா நகரப்பகுதியிலுள்ள தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்திற்கு ஈரப்பெரியகுளம் செல்லவேண்டிய நிலை எற்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்தவதற்கு வன்னி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கை மேற்கொள்வதுடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலிருந்து இவ் அலுவலகத்தினை ஈரப்பெரியகுளம் பகுதிக்கு மாற்றுவதற்கு தேசியக்கட்சி ஒன்று மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தென்னை பயிர்ச் செய்கை காரியாலயமானது தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ளது. அக்காரியலாயத்திற்கான அலுவலகம் ஒன்றினை மாவட்ட செயலகத்திலிருந்து பெற்று வழங்குமாறும் இக்காரியலாயம் ஈரப்பெரியகுளம் பகுதிக்கு செல்வததைத்தடுத்து நிறுத்த முன்வருமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் விவசாயிகள் கோரியுள்ளார்கள்.

தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்தில் விவசாயிகள் தென்னங்கன்று கொள்வனவு, காணி அபிவிருத்தி செய்யும் கடன்திட்டம், நீர்ப்பாசனம், மாட்டுத்தொடுவம், விவசாயக்காணி, உரப்பாவனை ஊடுபயிர் போன்ற மானிய அடிப்படையில் கடன்திட்டம் என்பன வழங்கிவைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.