சட்டவிரோதமாக வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாத்துவ பொலிஸ் பிரிவின் அரலியஉயன, மாலேகம பிரதேசத்தில் இந்த நிலையம் நடத்தப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் வாத்துவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைதாகியுள்ளனர். இவர்கள் தந்தை, மகன் மற்றும் மருமகள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வெளிநாட்டில் வேலைபெற்றுத் தருவதாக கூறி 25,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை பணம் பெற்று வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்களால் இவ்வாறு 160 பேரிடம் இருந்து சுமார் 80 இலட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் 33 முறைப்பாடுகள் வாத்துவ பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று களுத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, வாத்துவ பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.