தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்திய “வன்னியின் வாதச்சமர் 2013” நேற்று காலை 8.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய ஐயாத்துரை அரங்கில் ஆரம்பமாகியது.
தகுதிகாண் சுற்றிலே புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த 8 அணிகள் காலிறுதிச் சுற்றில் மோதின. காலிறுதிச் சுற்றிலிருந்து அரையிறுதிப் போட்டியிலே வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் எதிர் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் விபுலானந்த கல்லூரி எதிர் சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி என்பன போட்டியிட்டன.
இவ்விரு அரையிறுதிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியிலே வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் எதிர் விபுலானந்த கல்லூரி என்பன பங்கு பற்றின.
சவால் மிகு இறுதிப் போட்டியிலே வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெற்றி வாகை சூடியது. மேலும் சிறந்த விவாதியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய போட்டியாளர் மயூரதன் தெரிவு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற அணிகளுக்குரிய வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பரிசில்கள் என்பன தமிழ் மாமன்றத்தின் பிரம்மாண்டமான கலைவிழாவிலே வழங்கப்படவுள்ளது.
-நடராஜா கிருத்திகன்- (தமிழ் மாமன்றம்)