பெட்ஷீட்டில் கட்டி கர்ப்பிணியை மருத்துவமனை கொண்டு சென்ற அவலம்!!

568

ஒரு கம்பில் பெட்ஷீட்டை கட்டி அதில் நிறை மாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற அவலம் நடத்துள்ளது.

கேரளா பாலக்காடு அருகே அட்டப்பாடி எனும் கிராமம் இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் எடவன்னி எனும் ஊரை சேர்ந்தவர் தனலி.

இவரது மனைவி மணிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து புதூர் மருத்துவமனை ஆம்புலன்ஸை அனுப்ப சொல்லி கேட்டுள்ளனர். மூன்று மணிநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. காரணம் கேட்டதற்கு சாலை சரியில்லை அதனால் ஆம்புலன்ஸ் வராது என்ற காரணம் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பின் மலை கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கம்பு ஒன்றில் பெட்ஷீட்டை எடுத்து கட்டி அதில் கர்ப்பிணி பெண்ணை படுக்க வைத்து காட்டின் வழியே ஏழு கிமி தூரம் தூக்கி சென்றுள்ளனர்.

மலை கிராமத்தில் சாலை வசதிகள் இல்லை ஜீப் மட்டுமே வந்து போகும், அதுவும் மழை பெய்யும் சமயங்களில் ஜீப்பும் வரமுடியாததால் ஏழு கிமி நடந்தே கர்ப்பிணியை தூக்கி வர வேண்டி இருந்தது.

இருப்பினும் பிரசவம் நல்லபடியாக முடிந்து அழகிய குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் அந்த கர்ப்பிணி. இந்த வீடியோ இணையத்தில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.