வவுனியாவில் வீதியில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை : நகரசபைத் தலைவர்!!

333

போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி திருத்த வேலைகளை மேற்கொள்ளும் வாகன திருத்தும் நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருத்தகங்கள் போதிய இடவசதியின்றி வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி திருத்துவதனால் பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.

தாண்டிக்குளம், பூந்தோட்டம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வாகன திருத்தகங்களை நேரடியாக சென்று பார்வையிட்ட நகரசபை தலைவர் அடங்கிய குழுவினர் குறித்த திருத்தகங்களின் உரிமம் மற்றும் இடவசதிகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார். இதன் பின்னர் நகரசபை தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

வீதிகளில் வைத்து வாகனங்களை பழுதுபார்க்கும் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைத்தவண்ணமுள்ளது. அத்துடன் அதனால் ஏற்படும் பாதிப்புகள் வாகனத்தின் கழிவு எண்ணை நிலத்தடி நீரில் கலப்பது தொடர்பாகவும் முறைப்பாடு கிடைத்து வருகின்றது.

இவற்றை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளதனால், இதற்குமப்பால் வீதிகளில் வைத்து வாகனங்களுக்கான டயர் மாற்றும் கடைகள் காணப்படுவதுடன் பாதசாரி கடவைகளை ஆக்கிரமித்தும் அவர்கள் வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே பொலிஸாரின் உதவியுடன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் சகல வர்த்தக நிலையங்களிற்குமான வியாபார அனுமதியினை 07ம் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். வியாபார அனுமதி முடிவடைந்தவர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் குறித்த காலப்பகுதிக்குள் உரிய நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.