வவுனியா குழந்தை கடத்தலுடன் தொடர்புடைய 8 பேர் கைது!!

775

வவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் 8 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் மற்றும் ஆணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியலாயத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி கோரளகெதர தலைமையிலான 12 பேர் அடங்கிய பொலிஸ் பிரிவினர் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 8 பேரை நேற்று (08.06) கைது செய்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பிரகாரம் குழந்தையை கடத்துவதற்காக குழந்தையின் தந்தையார் வவுனியாவை சேர்ந்த நபரினூடாக பணப்பேரம் பேசியதாகவும் குழந்தையை கடத்தி வைத்திருந்த இரு பெண்களுக்கும் தொண்ணூறாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கு தலா ஐயாயிரம் ரூபா கொடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குழந்தையை இந்தியாவிற்கு கடத்தி செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளமையும் பொலிஸாரின் விசாணைகளில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு வவுனியா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்துடன் இதுவரை 13 பேர் கைது செய்ய்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.