யுத்த பாதிப்புக்கு உள்ளான பெண்களின் கைவினைப் பொருட்கள் பொதுநலவாய கண்காட்சியில்!!

422

coஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைவினைப் பொருட் கண்காட்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை கொழும்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கைவினைப் பொருட்கள் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருளான பன்புல் மூலம் தயாரிக்கப்பட்ட தொப்பிகள், கைப்பைகள், மேசை விரிப்புகள் மற்றும் அலங்கார பொருட்கள் என 25 வகையான பொருட்கள் பார்வைக்கு வைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்த தயாராகி வருகின்றது.

யுத்தத்தினால் அங்கவீனமடைதல், குடும்பத் தலைவரின் இழப்பு உட்பட பாதிப்புக்குள்ளான பெண்களின் நலன்களை பேணும் அமைப்பாக இந்த அமைப்பு செயல்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு தெரிவான இரண்டு அமைப்புகளில் தமது அமைப்பும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ஏரம்பமூர்த்தி கங்காதரன் தெரிவிக்கினறார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உற்பத்திகளை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கும் கிடைத்த சந்தர்ப்பமாக தான் இதனை கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.