குழந்தை இல்லாததால் மனைவியை உயிரோடு எரித்து தீக்குளித்த கணவன்!!

347

succideதமிழ்நாட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனைவியை உயிருடன் எரித்துவிட்டு கணவன் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பறக்கை, முகிலன்விளை பகுதியை சேர்ந்தவர் பொன்நீலவடிவு. இவரது மகன் கனகசபாபதி (37). விவசாயி. இவரது மனைவி லீலாவதி (35)திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்காததால் இவர்கள் மனவேதனையுடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை கனகசபாபதி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன் பகுதியில் இவரது தந்தை பொன்நீலவடிவு, தாயார் பரிமளவள்ளி ஆகியோர் இருந்தனர். கனகசபாபதி உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அறையில் இருந்து அலறல் சப்தம் கேட்டு வெளியே புகையும் வெளிவந்துள்ளது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோட்ட அலுவலர் பத்மகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அப்போது கனகசபாபதி தீயில் கருகி உயிரிழந்த நிலையிலும், லீலாவதி ஆபத்தான நிலையிலும் காணப்பட்டனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த லீலாவதியை நாகர்கோவில் அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். கனகசபாபதியின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து லீலாவதி அளித்துள்ள வாக்குமூலத்தில், பெட்ரோல் ஊற்றி தன்னை உயிரோடு கொளுத்திய கணவன், தன் உடலிலும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு கட்டிப்பிடித்துக்கொண்டதில் இருவரும் கருகியதாக தெரிவித்துள்ளார்.