எனது காதலியை நேரம் வரும் போது கூறுவேன் : நடிகர் விஷால்!!

332

Vishalதீபாவளியை முன்னிட்டு கடந்த 2ம் திகதி பாண்டியநாடு படம் தமிழகம் முழுவதும் ரிலீசானது. இந்தப் படத்தை விஷால் பிலிம்பேக்டரி சார்பில், நடிகர் விஷால் தயாரித்துள்ளார். இப்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஊர் ஊராக படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து வேலூரில் பாண்டியநாடு திரையிடப்பட்ட ஒரு தியேட்டருக்கு நேற்று வந்தார். மாலை 4மணிக்கு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் தோன்றி நன்றி கூறினார். முன்னதாக தியேட்டர் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில், பட்டாசு வெடித்தும், டிரம்ஸ் வாசித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடந்த நிருபர்கள் சந்திப்பில் நடிகர் விஷால் கூறியதாவது..

என்னுடைய தொழில் நடிப்பது. என்னுடைய தெய்வமாகிய ரசிகர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். முதன் முதலாக நான் தயாரித்துள்ள படம் பாண்டியநாடு. படம் நன்றாக போகிறது. அதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன். என்னுடைய அடுத்த படம் நான் சிவப்பு மனிதன். இந்த படம் ஏப்.11ம் திகதி ரிலீசாகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மதகஜ ராஜா பொங்கலுக்கு ரிலீசாகும் என்றார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார்.

உங்களுடைய திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேட்டனர். எனக்கு இப்போது தான் 22 வயதாகிறது. இன்னும் நாட்கள் இருக்கிறது. அதன் பின்னர் திருமணம் செய்வேன் என்றார். 4 ஆண்டுகளுக்கு முன்னரும் 22 வயது தான் என்றீர்கள். இப்போதும் 22 வயது என்றால் எப்படி என்று நிருபர் குறுக்கே கேள்வி எழுப்பிய போது, அருகில் இருந்த பட இயக்குனர் சுசீந்திரன் இன்னும் 4 ஆண்டுகள் கழித்தாலும், இவர் அதே வயதைத்தான் கூறுவார் என்றார்.

தொடர்ந்து யாரையாவது காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆமாம் அது யார் என்று நேரம் வரும் போது கூறுவேன் என்றார்.