வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (15.06.2018) காலை 7.30 மணியளவில் மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நேற்றைய தினம் தென்னிலங்கையிலிருந்து வவுனியாவிற்கு வந்த நால்வர் சொகுசு வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக முறையில் வவுனியா நகரில் சுற்றித்திரிந்துள்ளனர்.
இதனையடுத்து இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து குறித்த சொகுசு வாகனத்தினை மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் வழி மறித்துள்ளனர். இதன் போது வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.
வாகனத்தினை இரு மோட்டார் சைக்கிலில் பின் தொடர்ந்த விசேட அதிரடிப்படையினர் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே அவர்களை மடக்கிப்பிடித்து வாகனத்தினை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன் போது வாகனத்திலிருந்து ஒரு ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியதுடன் குருநாகல், கம்பகா போன்ற பகுதிகளை சேர்ந்த 31, 39 , 42 , 44 , வயதுடைய நால்வரையும் அவர்கள் பயணித்த வாகனத்தினையும் கைப்பற்றி வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆயர்படுத்தியுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்லவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.






