எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர் : உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்!!

942

உயிரிழந்த எனது மகனை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் அவனின் ஆத்மா சாந்தியடைய விடுங்கள் என அண்மையில் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் நிதர்சனனின் பெற்றோர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது குடும்ப வறுமை காரணமாக எனது பிள்ளை பாடசாலை விடுமுறையில் நண்பர்களுடன் இணைந்து கொழும்புக்கு வேலைக்கு சென்றார். இதன்போது அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைந்து விட்டார்.

இதனை எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிரதேச சபை உறுப்பினர் தன்னுடைய அரசியலாக்க முற்பட்டார், நாம் அதற்கு இடம்கொடுக்கவில்லை,

இந்த நிலையில், அவர் தனது முகநூல் மூலம் எங்களைப் பற்றியும், எங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் அழைத்துச் சென்ற போதகர் பற்றியும் அவதூறு செய்து வருகின்றார், தயவு செய்து எமது மகனின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

எமது மகனின் மரணத்தில் இனவாதத்தைத் தூண்ட இவர்கள் முயற்சி செய்கின்றார்கள், அதனை நாம் விரும்பவில்லை, மகனின் உடலை கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு கொண்டு வருவதிலும் கூட இவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.

எரிபொருள் மாத்திரம் வழங்குமாறு தெரிவித்தனர், இதன் பின்னர் உடலை வீட்டுக்கு கொண்டு வந்த பின்னர் முப்பதாயிரம் எனத் தெரிவித்து பணத்தை பெற்றுக் கொண்டனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.