வவுனியா பாடசாலையொன்றில் மாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்!!

836

வவுனியா பாவற்குளம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது. இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6ற்குள் கல்வி பயிலும் 11 மாணவர்கள் உள்ளனர். குறித்த மாணவர்களுக்கு அரசினால் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையிலேயே சமைத்த உணவுகள் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலையில் சமையல் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கு அழுகிய நிலையில் இருந்த கிழங்குகள் ,வெங்காயம், பழுதடைந்த அரிசி போன்ற சமையல் பொருட்கள் காணப்பட்டுள்ளன.

குறித்த நபர் இது தொடர்பாக பாடசாலையின் பொறுப்பாசிரியர் ஒருவரிடம் வினாவிய பொழுது குறித்த சமையல் பொருட்கள் இன்று மாணவர்கட்கான உணவு சமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் என தெரிவித்துள்ளார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் நடக்கும் இந்த மோசடிகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?