பேஸ்புக் காதலன் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட ஒரு குழந்தையின் தாய்!!

275

fbபேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகிய காதலனுடன் செல்லிடப் பேசி குறுந்தகவல் ஊடாக ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டதால் மனமுடைந்த திருமணமான ஒரு குழந்தையின் தாய் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாதுக்க, கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது.

உயிரிழந்த பெண் பேஸ் புக் மூலம் ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகமான 21 வயதான இளைஞருடன் இந்த பெண் தனது கணவருக்கு தெரியாமல் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி வந்துள்ளார். பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலன் பாதுக்க உடுமுல்ல என்ற பிரதேசத்தை சேர்ந்தவர்.

இந்த காதல் தொடர்பை அறிந்து கொண்ட கணவர் வீட்டில் இருந்த கணணியை உடைத்து விட்டு சம்பவம் குறித்து பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர் கணவர் தனது மனைவியை கொட்டாவ, பன்னிப்பிட்டியவில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

எனினும் மூன்று வயது குழந்தை தொடர்பில் ஏற்பட்ட அனுதாபம் காரணமாக மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சென்ற உயிரிழந்த பெண் பேஸ்புக் காதலனுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

காதலன் பெண்ணுக்கு செல்லிடப் பேசி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதன் ஊடாக பெண்ணின் கணவருக்கு தெரியாமல் இருவரும் தொடர்புகளை தொடர்ந்து வந்தனர்.

கடந்த 10ம் திகதி காலை உயிரிழந்த பெண் தனது பேஸ்புக் காதலனுக்கு அறிவிக்காமல் நுகேகொட பிரதேசத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்றிருந்தார். இதனை அறிந்து கோபம் கொண்ட காதலன் குறுந் தகவல் மூலம் பெண்ணை திட்டித் தீர்த்துள்ளார்.

இதனால் மனமுடைந்து போன பெண் நைலோன் கயிற்றை பயன்படுத்தி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் குறித்து பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.