யாழ். சுழிபுரத்தில் சிறுமி உயிரிழந்தமைக்கான காரணம் : வெளியானது!!

337

யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரண பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதில் சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதால், அவர் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பரவலாக முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுமி றெஜினா துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என மரண பரிசோதனை அறிக்கையின் மூலம் நிரூபனமாகியுள்ளது.

பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா, கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.

மாணவி வீட்டிற்கு வந்த நேரத்தில், தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார். தகப்பனார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலை 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார்.

எனினும், அங்கு வரவில்லை என சிறுமியின் பெரியதாயார் தெரிவித்ததனையடுத்து குறித்த சிறுமியியை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர்.

விடயத்தினை அறிந்த அந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.

சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.