யாழில் பரிதாபமாக பலியான கிளிநொச்சி சிறுவன் : நேர்த்திக்கடன் செலுத்தும் போது நேர்ந்த விபரீதம்!!

304

யாழ். தீவகம் மண்கும்பான் சந்தியில் தூக்கு காவடி சென்ற உழவு இயந்திரத்தில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி – பூநகரி ஆலங்கேணிப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சச்சித்தானந்தம் கிளியமுதன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் நெருங்கிய உறவினர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தும் முகமாக யாழ்.மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூநகரி ஆலங்கேணியிலுள்ள ஆலயமொன்றை நோக்கி தூக்குக் காவடி எடுத்து சென்றுள்ளார்.

தூக்குக் காவடி எடுத்த உழவு இயந்திரத்தின் பெட்டியில் சிறுவனும் மற்றும் பலரும் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த சிறுவன் மண்கும்பான் சந்தியில் இறங்க முற்பட்ட போது தவறி விழுந்து உழவியந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், உழவு இயந்திரத்தின் சாரதி ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.