மன்னாரில் கோர விபத்து : ஒருவர் பலி : பேருந்தை நிறுத்தாமல் தப்பிச் சென்ற சாரதி!!

249

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர், செல்வநகர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி 2 வாகனங்களுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த சிறு வியாபாரியான 61 வயதுடைய பத்திரப்பன் சேது நம்பு என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நகரில் இருந்து தாழ்வுபாடு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எழுத்தூர் செல்வநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியுள்ளது.

பின்னர் தாழ்வுபாட்டு பிரதான வீதியூடாக எமிழ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு மாங்காய் கொள்வனவு செய்து கொண்டு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் மீதும் பேருந்து மோதியுள்ளது.

இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார். பேருந்தின் சாரதி பேருந்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்தில் ஒன்று கூடிய மக்கள் காயமடைந்த நபரை மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் எமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பத்திரப்பன் சேது நம்பு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதி இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.