எனது அக்காவை காதலிக்க உனக்கென்ன தகுதி : சாதி வெறியால் நடந்த கொடூர சம்பவம்!!

328

திருச்சி மாவட்டத்தில் தனது அக்காவை காதலித்த நபரை அப்பெண்ணின் சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரசிம்மன் கோவில் அருகிலுள்ள தோப்பு ஒன்றில் விஜய் என்ற நபர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் உடலின் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதால் ரத்தம் வெளியேறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே விஜய் உயிரிழந்தார்.

விஜய் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் சாதி மாறிய காதலால் இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அழகேஸ்வரி என்ற பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவியை விஜய் காதலித்து வந்துள்ளார். திருச்சி பேருந்து நிலையத்தில் வைத்து இருவரும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் விஜய்-அழகேஸ்வரி காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக விஜய் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வா, கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜய்யை கத்தியால் குத்தி சாய்த்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும்,எனது அக்காவை காதலிக்க உனக்கென்ன தகுதியிருக்கு, நீ வேறு சாதியை சேர்ந்தவன் என பிரச்சனை செய்து, கத்தியால் குத்தியுள்ளார்.

தற்போது விஷ்வா உள்ளிட்ட 3 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.