சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு கோரிக்கை!!

283

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை, முதல்வர் விக்னேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், நீதிமன்றின் தீர்ப்பை தார்மீகமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, வடக்கு மாகாண அமைச்சராக இருந்த பா.டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.