வவுனியாவில் கைத்துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைது!!

1323

வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மூவர் கைதுப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயற்சித்தாக 27.06.2018 அன்று பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனின் உத்தரவுக்கு அமைவாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி கோரளகெதர மற்றும் சாஜன் ஜேசுதாசன் தலைமையில் அதிரடியாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நேற்று (01.07) மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு கார் ஒன்றையும், கைத்துப்பாககி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் தெரிவிக்கையில்,
குறித்த செல்வந்தரின் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றவர்கள் சொகுசுக் காரில் சென்று கைத்துப்பாக்கியை காட்டி கதவை திறக்குமாறு மிரட்டியுள்ளனர். வீட்டு உரிமையாளர் கதவை திறக்காத காரணத்தால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மூவரும் தப்பித்திருந்தனர்.

வீட்டு உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு ராஜகிரிய, வெல்லம்பிட்டிய மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த 27, 30, 37 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கியானது போலியானது என்பதுடன் இவர்கள் மூவரும் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை இன்று (02.07) நீதிமன்றத்தில் பூவரசங்குளம் பொலிசார் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.