வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் பெறுவதற்காக பொருத்தப்பட்டுள்ள சூரியகலத்தினால் அப்பகுதியில் அதிகளவு வெப்ப நிலை காணப்படுவதாகவும் இதன் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் நோய்வாய்ப்புக்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும்,
எனவே இதிலிருந்து தமது கிராமத்தை மீட்டுத்தருமாறும் உடனடியாக காத்தார்சின்னக்குளம் பகுதியிலிருந்து குறித்த நிறுவனத்தை நிறுவனத்தை அகற்றுமாறும் அப்பகுதி கிராம மக்கள் கோரியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரியகலம் (சோளர்) மூலம் இலங்கை மின்சார சபையினருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக தமது இருப்பிடங்களுக்கு குறிப்பாக அப்பகுதி கிராமத்திலுள்ளவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும் சூழல் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் நோய்த்தாக்கங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும்,
வெப்பம் அதிகரித்து அப்பகுதி முழுவதும் வெப்பநிலை காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைத்தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று காலை அப்பகுதியில் ஒன்றிணைந்த கிராம மக்கள் கோரியுள்ளார்கள்.
குறித்த சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு காவலாளி தமது கடமைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்து எமது வீடுகளில் நடைபெறும் அன்றாட செயற்பாடுகள், நடவடிக்கைகளை அவதானித்துவருவதாகவும் இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் இது குறித்த முறைப்பாடு ஒன்றினை வவுனியா பிரதேச செயலாளரிடமும் அரசாங்க அதிபரிடமும் முறையிடவுள்ளதாக காத்தார்சின்னக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.














