நான் தமிழச்சி என்று சொல்லிக் கொள்ள அவமானப்படுகிறேன் : நடிகை கஸ்தூரி!!

670

சென்னையில் சிறுமி ஒருவர் 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை மிரட்டி, 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி இது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறுகையில், ‘வரிசையாக இதே மாதிரி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹாசினி விடத்துக்குப் பிறகு சென்னையில் இதுமாதிரி சம்பவங்கள் நடக்காது என நினைத்தால், அதையெல்லாம் செய்தியாகப் படித்துக்கொண்டே இன்னொரு பெண்ணை சீரழித்துக் கொண்டிருக்கிறார்களே.

11 வயதுப்பெண் 7ஆம் வகுப்பு படிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, என் பெண்ணைப் போலவே இருக்கிறது. புரசைவாக்கத்தில் நடப்பது போயஸ் கார்டனில் நடக்காது என்பது என்ன நிச்சயம்? யாருமே இங்கு பாதுகாப்பாக இல்லை.

இந்த மாதிரி இருந்தால், தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ எப்படி வாழ முடியும்? தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஆண்களும் இப்படித்தான் மோசமானவர்களா என்றே எனக்கே தோன்றுகிறதே..

‘பெண்கள் பாதுகாப்பில் உலகத்திலேயே இந்தியா தான் மோசமான நாடு’ என சமீபத்தில் ஒரு Survey வெளியானது. ஆப்கானிஸ்தானை விட, சிரியாவை விட வெட்கக்கேடான ஒரு நிலையில் தானே நாம் இருக்கிறோம்.

அங்கு பெண்களை மோசமாக நடத்துகிறார்கள். இங்கு பெண்களை மோசமாக நடத்துபவர்கள் யாரும் மனிதர்களே அல்ல, எல்லோரும் விலங்குகள். இது சென்னை நகரமா இல்லை மொத்தமாகவே வண்டலூர் உயிரியல் பூங்காவா என்று தெரியவில்லை.

’தண்டனை வேண்டும்’ என நாமும் ஒவ்வொரு முறையும் கூவிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 22 பேரில், 18 பேரைக் கைது செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய முகத்தை மறைத்துத் தானே புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாராவது நிரபராதியாக இருந்துவிட்டால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாழ்க்கை பாழாகிவிடும் என்றுதானே..

அந்த 22 பேரின் குடும்பத்திலும் 11 வயது குழந்தை மகளாகவோ, பேத்தியாகவோ இருப்பார்கள்தானே.. ஒரு குழந்தையைப் பார்த்து இந்த மாதிரி எண்ணம் எப்படி வரும்? என்ன தமிழ் கலாச்சாரம்.. இந்த மாதிரி குற்றத்தில் மாட்டியவர்கள் வீட்டின் முன்னால், அவர்கள் முகத்தை போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.

நம்மூரில் எதற்கும் பயப்படுவதாக தெரியவில்லை. ஒருவேளை பொதுவெளியில் அவமானப்பட்டால், அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அவமானப்பட்டால்.. ஒருவேளை அதனால் முன்னேற்றம் எதுவும் இருக்குமா என நப்பாசை, நம்பிக்கை என்றெல்லாம் சொல்ல முடியாது.

இந்த சம்பவத்திற்கு ஆடையோ, வயதோ அந்தப் பெண்ணின் நடத்தையோ காரணமில்லை. அந்தப் பெண்ணுக்கு இருக்கும் குறையைக் கூடப் பொருட்படுத்தாமல், அதையே advantage ஆக எடுத்துக்கொண்டு ஏழு மாதங்களாக இப்படி சீரழித்திருக்கிறார்கள்.

குழந்தைகளையும், சிறுமிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிற கேடுகெட்ட கலாச்சாரம் தான் நம்முடைய தமிழ் கலாச்சாரம் என்று சொன்னால், நான் தமிழச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்.

சென்னை காவல்துறைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். யார் யாரையோ சமூக விரோதிகள் என்று சொல்லி சுடுகிறார்களே.. இங்கு கண்ணெதிரே தெளிவாக தெரிகிற சமூக விரோதிகளுக்கு சட்டப்படி நிறைய தவணை கொடுக்காமல் வேகமாக வழக்கை முடியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.