முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் பகல் நேரங்களில் கூட அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் குறித்த விதியூடாக பயணிக்கும் மக்கள் பெரும் அச்சத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இது போன்று பெருமளவான யானைகள் இதற்கு முன் இங்கு இருக்கவில்லை. இந்த யானைகள் இலங்கையின் தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து விடப்பட்டுள்ளன.
யானைகள் கொண்டுவந்து விடப்பட்டமை தொடர்பில் அண்மையில் வட மாகாண முதலமைச்சரிடமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவில் கவனமெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.