வவுனியா நகரசபைத் தவிசாளர் பதவிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள கால்வாய்களில் துப்பரவுப்பணிகள் மேற்கொள்வதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பிரதேசம் துர்நாற்றம் வீசும் பகுதியாகவே தற்போதும் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் மாணவர்கள், பொதுமக்கள் நடமாடமுடியாத நிலை காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் நகரசபை செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டங்கள் பல தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கும்போது,
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள கழிவுநீர் வடிந்தோடும் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி நீண்டகாலமாக காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.
இப்பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை.
வவுனியா நகரசபைத் தவிசாளர் பதவிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் கழிவு நீர் வடிந்து செல்வதற்கும் துர்நாற்றம் வீசுகின்ற நிலையிலும் தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பேருந்து நிலைய வர்த்தகர்கள் சிலரிடம் கேட்டபோது, கால்வாய்கள் துர்நாற்றம் வீசுகின்றது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் நேரடியாக நகரசபைக்கு வழங்கப்பட்டபோதும் இன்று வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு பேருந்துகள் இன்றி பொதுமக்களின் வரவு குறைந்த நிலையில் காணப்படுகின்றபோதிலும் துர்நாற்றம் வீசும் காரணத்தினால் மேலும் இப்பகுதிக்கு பொதுமக்கள் வருவது குறைந்து காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.
பழைய பேருந்து நிலையப்பகுதிகள் பலவற்றில் இவ்வாறு துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது. நகரசபையின் பூரண பொறுப்பிலுள்ள பேருந்து நிலையப்பகுதியை கண்காணித்து மேற்பார்வை செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து நகரசபை விலகிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.