பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்றுடன் நிறைவு!!

265

chogmஇலங்கையில் இடம்பெற்று வரும் 23 வது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இன்று பிற்பகல் நிறைவடைகிறது.

பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய செயலாளர் கமலேஷ் சர்மா கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது பொதுநலவாய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ள அதேவேளை அடுத்த பொதுநலவாய மாநாடு நடைபெறும் நாடு குறித்த அறிவிப்புக்களும் வெளியிடப்படும்.

இம்முறை இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த இறுதி அறிக்கையை தயார்படுத்தல் தொடர்பில் அரச தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கொழும்பு தாமரைத்தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் கோலாகலமாக ஆரம்பமானது.

இந்த மாநாட்டை தமது தாயாரான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சார்பில் முதற்தடவையாக இளவரசர் சார்ள்ஸ் ஆரம்பித்து வைத்தார்.

53 நாடுகளைக் கொண்ட இந்தப் பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் இம்முறை இந்தியா, கனடா, மொறிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் பங்குபற்றமுடியவில்லை என அறிவித்திருந்தனர்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொண்டார். கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தீபக் ஒபராய் கலந்துகொண்டார்.

மொறிஷியஸ் பிரதமர் ராம் குலம் சார்பில் வெளிவிவகார அமைச்சரும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சருமான கலாநிதி அர்வின் புளேல் கலந்துகொண்டார்.