வெளிநாட்டில் இருந்து வந்த பெண் ஒருவரும், அவரை அழைத்துச் செல்ல வந்த தாயுமே கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்லும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறையை சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்விபத்தில் சிக்கியுள்ளதுடன், அந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் அழைக்கச் சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்றிருந்தது.
வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.