நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பலி!!

472

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 6 விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உகன, கிளிநொச்சி, கந்தான, மிஹிந்தலை, வெலிமட மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களிலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையாகம் தெரிவித்துள்ளது.

உகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமனலபெந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் 71 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் இருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் ரக் ரக வாகனம் மோதியதில் 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை, ஆனியாகந்த வைத்தியசாலை வீதிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ததில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயியரிழந்துள்ளார்.

அத்துடன் மிஹிந்தலை, பெரளுஹிந்த சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிரக்டர் ரக வாகனம் ஒன்றின் பின்னால் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை ரம்பாவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

வெலிமட பகுதியில் பாதையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது பேருந்து ஒன்று மோதியதில் 51 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டிய பகுதியில் பாதசாரிகள் கடவையூடாக பாதையை கடக்க முற்பட்ட ஒருவரை லொறி ஒன்று மோதியதில் 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.