வவுனியாவில் 3000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட ஆலயம்!!

1010

ஆலயங்களை புனரமைக்கும் போது தொல்லியல் திணைக்களமும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது வன இலாகப் பிரிவினரும் தடைகள் விதிக்கின்றனர் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வெடுக்குநாறி மலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அனந்தி சசிதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட தமிழர்களுடைய ஆலயமாக இந்த சிவன் ஆலயம் விளங்கிவருகிறது.

அந்நிய படையெடுப்புகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வழிபாடுகளுக்கு தடை ஏற்பட்டதன் பின்னர் தற்போது இராணுவ சூழல் மறைந்த நிலையில் தொல்லியல் திணைக்களம் தடைகளை விதிக்கின்றது.

ஆலயங்களை புனரமைக்கும் போது தொல்லியல் திணைக்களமும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது வன இலாகப் பிரிவினரும் தடைகள் விதிக்கின்றனர்.

அத்துடன், நெற்செய்கையின்போது மகாவலி அதிகார சபையினர் எமது நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

இதற்கு முடிவுகளை எட்ட முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். கடந்த காலங்களில் கதிர்காமம் தமிழர்களின் இடமாக இருந்து ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்தர்களின் இடமாக மாறியுள்ளது.

அதேபோல் வன்னியில் குருந்தூர்மலை, ஒதியமலை போன்ற பகுதிகள் இராணுவத்தினாலும், சிங்கள பௌத்தவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் வெடுக்குநாறி மலையையும் அபகரிக்கும் நோக்கில் பல வேலைதிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கும் எமது மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதற்கும் அரசியல் பேதமற்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

குறித்த பிரச்சினை தொடர்பாக விரைவில் தீர்வு எட்டப்படுமா என்பது தொடர்பில் கூறமுடியாது. இருப்பினும் வடமாகாண சபையில் பிரேரணை கொண்டுவருவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.