வவுனியா உக்குளாங்குளத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞன் : நடந்தது என்ன?

815

வவுனியா உக்குளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (24.08.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது

வவுனியா உக்குளாங்குளம் முதலாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கிணற்றை சுத்தப்படுத்தும் நோக்கில் 20 வயதுடைய இளைஞன் கிணற்றினுள் இறங்கி சுத்தம் செய்து விட்டு கிணற்றின் மேல் பகுதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் கை நழுவியதில் 30 அடி உயரமான கிணற்றின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்துள்ளார் .

விழுந்ததும் சுய நினைவை இழந்துள்ளார். எனினும் கிணற்றருகே நின்ற குடும்பத்தினர் கூச்சலிடவும் அயலவர்கள் விரைந்து இளைஞனை மீட்டு முதலுதவி வழங்கி இளைஞனை சுயநினைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இளைஞர்கள், அயலவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இளைஞனை மரநாற்காலி ஒன்றில் அமர்த்தி அதனை கயிறு மூலம் கட்டி தூக்கி மேற்பகுதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர அழைப்பு (1990) அம்புலன்ஸ் வண்டி மூலம் பாதிக்கப்பட்ட இளைஞனை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மேலதிக சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.