மகாவலி திட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம் இதுவே : ப.சத்தியலிங்கம்!!

793

மகாவலி திட்டத்திற்கு எதிராக முல்லைத்தீவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

1980களிலிருந்தே தமிழ் மக்களின் பூர்வீக தாயக பூமியான வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் வகையிலான திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன.

எனினும் தமிழ் மக்களின் ஆயுத பலம் ஓங்கியிருந்த நிலையில் இவை சிங்கள அரசுகளால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சிங்கள அரசு தனது வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

மகாவலி எல் வலய திட்டத்தினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டுமல்ல வடக்கின் வன்னி, யாழ். ஆகிய மாவட்டங்களை நில தொடர்பின்றி பிரிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய காலநிலை மாற்றத்தால் எமது விவசாயிகள் நீரின்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது கஷ்டப்படுகின்றனர்.

எனவே தெற்கிலுள்ள இயற்கையான ஆறுகளிலிருந்து கடலிற்கு வழிந்தோடும் மேலதிக நீரை வட மாகாணத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்காக கொண்டு வருவது வரவேற்ககூடியதொன்று.

எனினும் கடந்தகால கசப்பான அனுபவம் தண்ணீர் வருவதற்கு முன்னர் குடியேற்றங்கள் வந்துவிடுமென்பதே. அதனாலேயே இதனை நாங்கள் எதிர்கின்றோம். அத்துடன் மகாவலி அதிகாரசபை இலங்கையின் சாதாரண காணி சட்டங்களிற்கு அப்பாற்பட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது.

மாவட்ட, பிரதேச நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் அதிகார சபையாகும்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உறுதிப்படுத்த வேண்டி அரசாங்கத்திற்கு நெருக்குதலை கொடுக்கும் முகமாக எதிர்வரும் 28ஆம் திகதி முல்லைத்தீவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வெகுசன போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.