நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்த உற்சவம் மற்றும் கொடியிறக்கம்!(படங்கள்)

1750

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் அம்மன் சமேதரராய் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தீர்த்த திருவிழாவின் போதும் வேல் பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.

இன்றைய தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.

மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 தினங்கள் இடம்பெற்று நேற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது.

மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்று முருகன் வள்ளி – தெய்வானை சமேதரராக வெளி வீதியுலா வந்தார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்