நாளை நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய மணமகன் : வெளியான காரணத்தால் அதிர்ந்த பெண்வீட்டார்!!

384

தமிழ்நாட்டின் திருச்சியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன்.

இவருக்கும் ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17-ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 50 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 22-ஆம் திகதி இரு வீட்டாரும் பெண்ணுக்கு முகூர்த்தப்பட்டு எடுக்க கடைக்கு சென்றனர்.

அப்போது தங்களது பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாயில் புடவை எடுத்துதர வேண்டும் என பெண் வீட்டார் கேட்க மாப்பிள்ளை வீட்டாரோ 20 ஆயிரத்துக்கு எடுப்போம் என கூறினர்.

இதனால் இரு தரப்புக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் முகூர்த்தப் பட்டு வாங்கினர்.

இந்நிலையில் திருமணத்துக்கு இரு நாட்களுக்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்கு 100 சவரன் நகை வேண்டும் என தடாலடியாக கூறினார்.

ஆனால் ஏற்கனவே பேசியது 50 சவரன் தானே என பெண் வீட்டார் பேசிய நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் மாப்பிள்ளை மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

தலைமைறைவாக உள்ள அவர் குடும்பத்தார் தேடப்பட்டு வருகிறார்கள்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 100 சவரன் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டாரால் மட்டும் திருமணம் நின்று போகவில்லை, பட்டுச் சேலையில் கறார் காட்டி மனக்கசப்பை ஆரம்பித்து வைத்த பெண் வீட்டாரின் பிடிவாதமும் ஒரு காரணம் என கூறியுள்ளனர்.