காதலனின் பிறந்த நாளை கொண்டாட காதலி செய்த திடுக்கிடும் செயல்!!

387

தமிழகத்தில் காதலன் பிறந்த நாளை கொண்டாட பெண் ஒருவர் இளைஞரை ஏமாற்றி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் நேற்று காலை ஏழு கிணறு பகுதியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் அவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

இதனால் தினேஷ் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது, அந்த பெண் தான் இதே பகுதியில் தான் வசிப்பதாகவும், தன்னுடைய தாயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வண்டி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் தினேஷ் தன்னுடைய வண்டியை கொடுப்பதற்கு தயக்கம் காட்டியுள்ளார். உடனே அந்த பெண் தன்னுடைய மொபைல் நம்பரை கொடுத்துள்ளார். அதை தினேஷ் சோதித்து பார்த்த போது, அந்த பெண்ணின் போனில் ரிங் அடித்துள்ளது.

இதையடுத்து அப்பெண்ணிற்கு தனது இருசக்கர வாகனத்தை தினேஷ் கொடுத்து அனுப்பியுள்ளார். வண்டியை வாங்கிச் சென்ற பெண் அரைமணி நேரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வராததால், அச்சமடைந்த தினேஷ் அந்த மொபைல் நம்பருக்கு கால் செய்துள்ளார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அந்த நம்பரை ட்ராக் செய்து பார்த்தபோது, அது தடா எல்லைப்பகுதியில் இருந்துள்ளது.

திரும்பவும் சில மணி நேரங்களுக்குப் பிறகு சென்னை எல்லைக்குள் வந்துள்ளது. உடனே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், இளைஞர் ஒருவருடன் வந்த அப்பெண்ணை பிடித்தனர்.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, தன்னுடைய காதலனுக்கு பிறந்த நாள் என்றும், அவருடன் தடா செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் தங்களிடம் வண்டி ஏதும் இல்லாத காரணத்தினால் தினேஷை ஏமாற்றி வண்டியை பெற்றுச்சென்றதாக கூறியுள்ளார்.

பின்னர் தினேஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அப்பெண் மற்றும் அவரது காதலனை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.