தாலிகட்டும் நேரத்தில் மணமகள் செய்த செயல் : இழப்பீடு கேட்ட மணமகன்!!

326

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று தஞ்சாவூர் மேலவீதி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் திருமண மண்டபம் களைகட்டியிருந்தது. மணக்கோலத்தில் மணவறையில் மணமகன் தயாராக அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில், தாலி கட்டும் நேரம் நெருங்கிய பிறகும் மணமகள் மணமேடைக்கு வரவில்லை.

மட்டுமின்றி இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் வேறொருவரை தான் காதலிப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.

இதைக் கேட்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மணமகள் குடும்பத்தினர், நீண்டநேரம் பேசிப் பார்த்தும்கூட, இந்தத் திருமணத்துக்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

சமரசத்திற்கு ஒப்புக்கொண்ட மணமகன் வீட்டார் திருமணத்துக்கு தாங்கள் செலவு செய்துள்ள 3 லட்சம் ரூபாயை மணமகள் வீட்டினர் தர வேண்டும் என கோரியுள்ளனர்.

இதனையடுத்து ரூ.2.25 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, உடனடியாக ஒண்ணேகால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மணமகள் வீட்டினர் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை பின்னர், தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.