வவுனியாவில் ஞாயிறு விடுமுறை வழங்க அனைத்து வர்த்தகர்களும் ஒன்றிணைந்து அழைப்பு!!

357

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி தொழில்புரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தமது குடும்பத்தினருடன் இன்புற்றிருக்க அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் இவ்வாரம் திங்கட்கிழமை முதல் அனைத்து வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த உரிமையாளர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மேற்படி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலுள்ள ஹாட்வெயார், நகைக்கடை, அழகுசாதனம் விற்பனை நிலையம், தொலைபேசி விற்பனை நிலையம், புடவைக்கடை நிலையம், மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையம், சி.டி விற்பனை நிலையங்கள் என்பனவற்றின் உரிமையாளர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் வவுனியா பொலிஸ் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினர், நகரசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் இறுதியில் அனைத்து வர்த்தகப்பிரமுகர்களும் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்குவது என்று ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.