வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்து நிறுத்தத் தடைசெய் : தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்!!

592

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் மூன்று காரணங்களை முன்வைத்து இன்று (18.09.2018) மதியம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேரூந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும்,
இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் தலமையிலான குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகளை தரித்து நிற்பதற்கும் தற்காலிக தடை விதித்து அவ்விடத்தில் பொலிஸார் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பேரூந்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேலதிகமாக வெளிமாவட்டங்களிலிருந்து பேரூந்துகளை பெற்று சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இ.போ.சபையின் இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

வடமாகாணத்திற்குரிய அனைத்து தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபட்டுள்ளமையினால் பொதுமக்களுக்கு பாரிய சிரமங்கள் எவையும் ஏற்படவில்லை.