கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தாய்-மகள் : வேலைக்கார பெண் அதிர்ச்சி!!

302

இந்தியாவில் தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மியான்வாளி பகுதியைச் சேர்ந்தவர் ஷசி தல்வார் (60). இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இரண்டு மகன்களில் மூத்த மகன் விஷால் தன் குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் கனடாவில் உள்ளார்.

ஷசி தல்வார் தன்னுடைய மாற்றுத் திறனாளி மகளுடன் வசித்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஷரி தல்வாரின் கணவர் இறந்துவிட்டதால், இருவரும் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அவர்களின் வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண், அவர்கள் வீட்டின் காலிங் பெல்லை தட்டியுள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், பின் பக்க கதவு வழியாக வீட்டின் உள்ளே சென்ற போது இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பது பற்றி அந்த வீட்டில் வேலை பார்க்கும் பெண் தான் தங்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து இங்கு வந்து ஆய்வு செய்ததில் வெளி ஆட்கள் யாரும் வந்து கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூதாட்டி சமையலறையில் சடலமாகவும், அவரது மாற்றுத்திறனாளி பெண் படுக்கை அறையில் உயிரிழந்தும் கிடந்தார்.

ஒரு அறையில் இரண்டு டீ-கப்புகள் மற்றும் சில தின்பண்டங்கள் இருந்தது. இதனால் அவர்களது தெரிந்த நபர் யாராவது வந்து சென்றிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் வீட்டில் வேலைக்கு சேர்ந்த பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரின் பின்புலம் குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பை மற்றும் கனடாவில் இருக்கும் மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது