2 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் : ஏமாற்றிய துப்பாக்கி!!

246

மாத்தறை கக்கனதுரை- கொகாவல பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் மீதும், வியாபார நிலையம் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் கடைக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட வேளை சந்தேக நபரின் துப்பாக்கி வேலை செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பேருந்தின் மீது 2 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடாத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அது பலனளிக்கவில்லை.

எனினும் இரண்டு தடவை பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயினும், துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பஸ் உரிமையாளருக்கும் சந்தேக நபருக்குமிடையில் நீண்டகாலமாக காணப்பட்ட பிரச்சினையே இதற்கு காரணமென தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.