வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு!!

590

நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ள வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபைக்கு தெரிவான உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(24.09) வவுனியாவில் இடம்பெற்றது.

நீதி அமைச்சின் வவுனியா மாவட்ட மத்தியஸ்தர் உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா தலைமையில் ஓவியா விருந்தினர் விடுதி மற்றும் மாவட்ட செயலக கேட்போர் கூடம் என்பவற்றில் இப் பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.

2003 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க விசேட வர்த்தகமானியின் பிரகாரம் விசேட காணி மத்தியஸ்தர் சபை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி சுமார் 20 இலட்சத்திற்குட்பட்ட பெறுமதிகளைக் கொண்ட காணிகளின் உடமை மற்றும் உரிமை பிணக்குகளுக்கு தீர்வு காணும் முகமாக விசேட காணி மத்தியஸ்தர் சபை வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிறுவுதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதில் வவுனியா மாவட்டத்திற்கான காணி மத்தியஸ்தர் சபையை நிறுவதற்காக மத்தியஸ்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத்தேர்வு கடந்த மே மாதம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு காணி மத்தியஸ்தர் சபை தொடர்பான விசேட செயலமர்வு கடந்த ஜீலை மாதம் நடைபெற்று, அதில் இருந்து மத்தியஸ்தர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காணிச் சட்ட முறைகள் தொடர்பான 3 நாள் செயலமர்வு கடந்த சனி, ஞாயிறு மற்றும் இன்றைய தினம் நடைபெற்றது. இப் பயிற்சி செயலமர்வில் தெரிவு செய்யப்பட்ட 34 விசேட காணி மத்தியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட அரச அதிபர் எம்.ஐ.ஹனீபா, சட்டத்தரணியும் மத்தியஸ்தர் சபை தொடர்பான ஆலோகருமான, எம்.திருநாவுக்கரசு, வடமாகாண உதவி காணி ஆணையாளர் கே.மகேஸ்வரன், யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான திருமதி புராதனி மதனராஜன், யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான திருமதி கோசலை மதன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான ரொகான் சாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வுகளை வழிநடத்தியிருந்தனர்.

தெரிவு செய்யப்பட்ட இக் காணி மத்தியஸ்தர்களுக்கான நியமனங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.