வவுனியா நகரசபை தவிசாளருக்கும் முச்சரக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல்!!

738

வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்னால் நகரசபைக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று இன்று ஏற்பட்டது.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் முரண்பாடான நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்த முடியாதென வவுனியா நகரசபையினால் சமிக்ஞை பலகை அமைக்கப்பட்ட போது, முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கும் நகரபிதாவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையத்திற்குள் வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பேருந்துகள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வீதியோரத்தில் தரித்து நின்றே சென்று வருகின்றது.

ஆகையால் அப்பகுதியிலுள்ள மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், தமது வீடுகளுக்கு முன்பாக பேருந்துகள் நிறுத்துவதை தடை செய்யுமாறு கோரி அப்பகுதி மக்கள் வவுனியா நகரசபையில் தமது முரண்பாட்டை தெரிவித்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, வவுனியா நகரபிதா இ.கௌதமன் அவர்களின் ஏற்பாட்டில் பேருந்துகளை சில மீற்றர் தூரம் சென்று மக்கள் வசிக்காத பகுதியில் நிறுத்துவதற்கு ஏதுவாக, வாகனம் நிறுத்துவதற்கு தடை செய்யும் சமிக்ஞை பதாதைகளை அமைக்கும் பணியை நகரசபை ஊழியர்கள் முன்னெடுத்தனர்.

இதன்போது பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் இதற்கு எதிர்ப்புப் தெரிவித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தம்மால் கட்டணங்களை பெறமுடியாது என்பதால் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளை நிறுத்தி செல்ல வேண்டும் அல்லது பேருந்து நிலையத்திற்குள்ளே பேருந்துகள் செல்ல அனுமதிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் வாகன தரிப்புக்கு தடை விதிக்கும் சமிக்ஞைகளை அமைக்க விட மாட்டோமென வவுனியா நகரபிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் இடம்பெறும் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதாக தெரிவித்த நிலையில், நகரசபையினர் தமது பணியை இடை நிறுத்தியிருந்தனர்.