கைது செய்யப்பட்டுள்ள ஈழத்துக் கவிஞரும் தென்னிந்திய நடிகருமான வா.ஐ.ச.ஜெயபாலன் தொடர்பில் குடிவரவுத் துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருவோர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்படக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் எங்கள் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் எந்த நேரத்திலும் நாட்டுக்கு வரமுடியும். ஆனால் அவர்கள் இங்கு வந்து மூன்று இனங்களுக்கு இடையிலும் மீண்டும் பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் இங்கு பிரச்சனை ஏற்படும் விதத்தில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் நடந்துகொள்ள அவர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது அஜித் ரோஹண தெரிவித்தார்.
யாராவது சுற்றுலா வீசாவில் வந்து பிரச்சனையை ஏற்படுத்தினால் கைதுசெய்யப்படுவார்கள் என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்பட்ட காரணத்தினாலேயே தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் அஜித் ரோஹண கூறினார்.