வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (03.10.2018) மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 4.00 வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து பயணிகளை ஏற்றிய இ.போ.ச பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து இ.போ.சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான அனைத்து பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சாலைக்கு எடுத்துச் சென்று ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுட்டனர்.
வவுனியா பொலிஸார் கைது செய்யப்பட்ட நடத்துனர் , சாரதியினை வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக இ.போ.ச வட மாகாண இணைந்த போக்குவரத்து தொழிற்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் நாவரட்ணம் கோபிகிருஷ்னன் அவர்களிடம் வினாவிய போது,
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேரூந்துகளும் , வவுனியாவிலிருந்து சேவையாற்றும் தனியார் பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடந்த முதலாம் திகதி முதல் வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்துகளும் உள்செல்ல தடை விதிக்கப்பட்டு. வவுனியாவிலிருந்து சேவையினை ஆரம்பிக்கும் பேரூந்துகளும் வவுனியாவில் முடிவுரும் பேரூந்துகளும் மாத்திரமே புதிய பேரூந்து நிலையத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை காரணம் தெரிவித்தே எமது நடத்துனர் ,சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளதாவும் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள வடமாகாண இ.போ.ச ஊழியர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என தெரிவித்தார்.








