வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலைப்பகுதிக்குபொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்!!

1454

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு கூட்டு எதிரணியினர் மற்றும் தொல்பொருட் திணைக்கள அதிகாரிகள் இன்று மாலை விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மில், தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோரும், தொல்பொருட் திணைக்கள அதிகாரிகளும் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த இரு தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர்கள் தவறான தகவல்களை வழங்கியதாக ஆலய நிர்வாக சபையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன்போது தொல்பொருட் திணைக்களத்தினர் சிங்களத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் இந்த கோயிலை இந்த பகுதி மக்கள் வைத்திருக்கின்றனர். இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தேவநம்பிய தீஸன் காலத்தைச் சேர்ந்தது. 1977ம் ஆண்டு இந்த மலையில் புத்த விகாரை ஒன்று இருந்திருக்கின்றது. இந்த விகாரையை பயங்கரவாதிகள் அழித்துள்ளனர். இந்த மலை முற்றுமுழுதாக பௌத்த மக்களுக்கே சொந்தம். இந்த மலைக்கு சிங்கள பெயர் ஒன்று இருக்கின்றது. நாங்கள ஆய்வு செய்ய மக்கள் தடையாக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆலயத்தைச் சூழவுள்ள மக்களுக்கும் குறித்த குழுவினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டபோது பொலிசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதேவேளை இவர்களுடன் பௌத்த பிக்கு ஒருவரும் வருகை தந்தந்துள்ளதுடன் அவர் வாகனத்தை விட்டு இறங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.