வவுனியா நகர்ப்புற பாடசாலைகளை பின்தள்ளி முதலிடம் பிடித்த சிவபுரம் அ.த.க. பாடசாலை மாணவி!!

1127

வவுனியா சிவபுரம் அ.த.க. பாடசாலை மாணவி பாலகுமார் ஹரித்திக்ஹன் சுஜா தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 197 புள்ளிகளை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியாவில் பின்தங்கிய கிராமமான சிவபுரம் கிராமத்தின் பாடசாலையில் கல்வி பயின்று மாவட்ட ரீதியில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

புலமைப்பரீட்சையில் மாவட்ட ரீதியாக சாதனை படைத்த மாணவி கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் மாத்திரமே கல்வி பயின்று வந்ததாகவும் தனக்கு கல்வி கற்பதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர், பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார் அத்துடன் தனது இலட்சியம் எதிர்காலத்தில் வைத்தியராகி ஏழை கிராமங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

சிவபுரம் பாடசாலையின் அதிபர் எஸ்.ஜெராட் கருத்து தெரிவிக்கையில் எமது பாடசாலையில் ஒன்பது மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தனர் அதில் இரண்டு மாணவர்கள் விசேட சித்திகளை பெற்ற நிலையில் ஒருவர் மாவட்ட ரீதியில் சாதனை படைத்துள்ளார் என தெரிவித்தார்.

மாவட்ட ரீதியில் சாதனை படைத்த மாணவியின் தாயார் பா.கிருஸ்ணவேணி கருத்து தெரிவிக்கையில், எனது மகளின் சாதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எந்தவிதமான பிரத்தியோக வகுப்புக்களுக்கும் செல்லாமல் எனது மகள் சாதனை படைத்துள்ளார். பின்தங்கிய கிராமங்களில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட ரீதியில் சாதனை படைத்த மாணவிக்கு மக்கள் வங்கி முகாமையாளரால் துவிச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை உபகரணங்கள், நினைவுப் பரிசில் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.