வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த மூன்று மாத யானைக்குட்டி : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

599

வவுனியா போகஸ்வெவ நாமல்கம என்னும் கிராமத்தில் மூன்று மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் வீழ்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (06.10) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வனப்பகுதியில் இருந்து தாய் யானையுடன் மூன்று மாத குட்டி யானையும் கிராமத்தை நோக்கி வந்தவேளை யானைக்குரிய வேலி போடப்பட்டுள்ளதனால் தாய் யானை காணிப் பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

குட்டி யானை வீட்டுக் காணிக்குள் சென்று அங்குமிங்கும் ஓடியுள்ளது. அப்போது கட்டில்லாத கிணறாகையால் குட்டி யானை தவறி வீழ்ந்துள்ளது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு வந்த காணி உரிமையாளர் கிணற்றை எட்டிப்பார்த்தபோது குட்டியானை உயிருக்குப் போராடியுள்ளது.

இது குறித்து நேற்று இரவு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் கிணற்றில் இருந்த குட்டி யானையை கிராமவாசிகளின் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கிணற்றினுள்ளே வீழ்ந்த குட்டி யானையை மீட்டெடுத்துள்ளனர்.

யானைக் குட்டிக்கு பலமாக அடிபட்டுள்ளதால் அதற்குரிய சிகிச்சையை வழங்கி தாய் யானையுடன் குட்டியை சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.