இலங்கையின் கொழும்புச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
இந்த தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களைப் பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் கொழும்பு வர பல சிரமங்களை எதிர்கொள்வதுடன் சிறைச்சாலை அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர் ஆளாவதாக அந்த அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
அத்துடன் இந்தக் கைதிகளின் குடும்பத்தினர் பெரும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆகவே அந்த கைதிகளை அவர்களது குடும்பத்தினர் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.இது தொடர்பாக தாம் பல தடவைகள் நீதிமன்றங்களைக் கேட்டிருக்கின்ற போதிலும் அவை தம்மை இது தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகங்களிடம் பேசுமாறு கூறியிருப்பதாகக் கூறியுள்ள நாமல் ராஜபக்ஷ அவர்கள், ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆகவே இது தொடர்பாக அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.