வவுனியாவில் இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி!!

428

சபரிமலை ஐயப்ப சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப பக்தர்களால் இன்று (15.10.2018) வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டமானது வவுனியா கந்தசாமி கோவில் முற்றலில் ஆரம்பமாகி பசார் வீதிவழியாக சென்று அங்கிருந்து மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

10 வயது தொடக்கம் 55 ஐந்து வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி இந்திய உயர்நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை சென்று ஐயப்ப சுவாமிகளை தரிசிக்க முடியும் என வழங்கிய தீர்ப்பினை மீளப்பெறக் கோரி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கெடுக்காதே கெடுக்காதே இந்துக்களின் பாரம்பரியத்தை கெடுக்காதே, சபரிமலை புனிதத்தை கெடுக்காதே, மாற்று மாற்று தீர்ப்பை மாற்று என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மாவட்ட செயலகத்தை சென்றடைந்த ஐயப்ப பக்தர்கள் அரசாங்க அதிபர் ஐ.கனீபாவை சந்தித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.