பாலியல் புகார் : காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்கிறேன் : நடிகர் அர்ஜுன் ஆவேசம்!!

573

சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, நிச்சயமாக நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கிகொடுப்பேன் என தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

படப்பிடிப்பின்போது தன்னிடம் அர்ஜுன் நெருக்கம் காட்டியதாக ஸ்ருதி ஹரிஹரன் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதனால், ஸ்ருதிக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனிடையே கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நேற்று அர்ஜுனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு, கர்நாடக வர்த்தக சபை வளாகத்தில் நிருபர்களிடம் அர்ஜுன் பிரஸ் மீட் வைத்தார். அப்போது கூறியதாவது: எனது தந்தை காலத்திலிருந்து 35 வருடங்களுக்கு மேலாக, கர்நாடக வர்த்தக சபையினரிடம், எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனவே அவர்கள் விசாரணைக்கு நான் ஒத்துழைத்தேன்.

எனக்கு ஏற்பட்ட காயம் எனக்கு மட்டுமானது கிடையாது. எனக்கு மட்டுமானதாக இருந்திருந்தால் இதை எளிதாக கடந்து இருப்பேன். ஆனால் எனது குடும்பத்தினருக்கு, எனது ரசிகர்களுக்கு மனது புண்பட்டுள்ளது.

வருங்காலத்தில் என்னை எதற்காக குறி வைத்தார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் உறுதியாக தெரியவரும். அதுவரை காத்திருங்கள்.

நான் இந்த விஷயத்தில் சமரசமாக போக தயாராக இல்லை. திரைப்பட வர்த்தக சபையின் ஒவ்வொருவரின் காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்டுக்கொள்கிறேன், நான் சமரசமாக போக போவதில்லை.

நான் தப்பு செய்து இருந்தால் எனக்கு தண்டனை கிடைக்கட்டும். வேறு யாராவது செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கட்டும். மொத்தத்தில் சமரசமாக போக போவதில்லை. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என கூறியுள்ளார்.