மகன்கள் இருந்தும் முதியவர்களுக்கு நடந்த சோகம் : நெஞ்சைப் பிசையும் சம்பவம்!!

374

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குடிசை வீட்டுக்குள்ளிருந்து வயதான தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதிகள் உணவு இன்றி பட்டினியால் சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாரோடு பகுதியில் வயல்காட்டுக்குள் தன்னந்தனியாக அமைந்துள்ள குடிசை வீட்டில் செல்லம் (85), தங்கம்மை (80) தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர்.

அவர்களது இரண்டு மகன்களும், திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனால் முதியவர்களான இந்தத் தம்பதி தங்களுக்குக் கிடைத்த உணவை உட்கொண்டு வாழ்க்கையை நடத்தினர்.

இவர்கள் வசிக்கும் குடிசை அருகே வேறு குடியிருப்புகள் எதுவும் இல்லை. எனவே, இந்தத் தம்பதி குறித்து கவலைப்பட நாதியில்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் குடிசைக்குள் துர்நாற்றம் வீசியியதை அறிந்து சந்தேகத்தின்பேரில் குடிசைக்குள் சென்று பார்த்திருக்கிறார்.

அங்கு முதிய தம்பதியின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அவர்களின் மகன்களும் வரவழைக்கப்பட்டனர்.

வயலுக்குள் இருந்த வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்குச் சடலத்தை தூக்கிச்செல்ல, சுமை தூக்கும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

சுமைதூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.

முதியவர்கள் இருவரின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.